ரூ.14 கோடி ஏலம்: எனது மகள்கள் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் - மிட்செல் உருக்கம்!
ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால் தனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
டேரில் மிட்செல்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால் தனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்று என் பெரிய மகளின் 5வது பிறந்தநாள்.
நெகிழ்ச்சி பேச்சு
நான் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது என் மகள்களுக்கு இப்போது புரியாது.இந்த தொகை என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள்.
எனக்கு அது போதும். என் மனைவியுடன் அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஐபிஎல் ஏலத்தில் என் பெயர் வருவதை பார்ப்பதும், கடைசிவரை படப்படப்பாக இருந்ததையும் மறக்க முடியாது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் போன பிறகு, இந்த முறை இந்த வெற்றியை அனுபவிப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது" என்று டேரில் மிட்செல் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.