பிரபல பாலிவுட் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது!
பிரபல இந்தி நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆஷா பரேக்
இந்தி திரைப்பட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவர் ஆஷா பரேக். 1960 கள் மற்றும் 1970 களில் உச்ச நடிகையாக முன்னணி கதாநாயகியாக இருந்தார். குஜராத்தி, பஞ்சாபி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
80 களின் பிற்பகுதியில் கதாநாயகியாக நடிப்பதை விட்டு கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். 1990 களில் தொலைக்காட்சி ஊடகத்தில் கால் பதித்த அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
தாதா சாகேப் பால்கே விருது
இவரது கலைப்பணிக்காக 1992 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ள 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஆஷா பரேக் விருது பெறவுள்ளார்.
திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன்,
இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.