தோனிக்காக இதை செய்ய நினைத்தேன்.. அந்த நாள் ஞாபகம் - ருதுராஜ் உருக்கம்!
தோனியுடன் பேட்டிங் ஆடுவது ஒரு நாஸ்டாலஜிக் உணர்வை கொடுத்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சென்னை - கொல்கத்தா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தல் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 138 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசியாக 3 ரன்கள் தேவை என்ற சூழலில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த எம்.எஸ். தோனி களமிறங்கினார்.
ருதுராஜ் மகிழ்ச்சி
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் "அந்த ஓவரின் கடைசிப்பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த ஓவரில் தோனி ஸ்ட்ரைக் எடுப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்பது எனக்குத் தெரியும்.
வாய்ப்பு அமைந்திருந்தால் தோனிக்காக சில டாட்களையும் ஆடத் தயாராகவே இருந்தேன். தோனியுடன் பேட்டிங் ஆடுவது ஒரு நாஸ்டாலஜிக் உணர்வை கொடுத்தது. நான் முதல் அரைசதத்தை அடித்த போட்டியில் தோனியுடன் இணைந்துதான் போட்டியை முடித்திருந்தேன். இன்றைக்கு தோனி க்ரீஸூக்குள் வருகையில் அந்த போட்டிதான் நினைவில் வந்தது. அவருடன் 22 யார்டை பகிர்ந்து கொள்வதில் எப்போதும் மகிழ்ச்சியே" என்று தெரிவித்துள்ளார்.