மகனை பார்த்ததும் கட்டியணைத்து கதறிய சிராஜின் தாய்- உணர்ச்சிகர சம்பவம்
ஆஸ்திரேலியா தொடரை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மகனை கட்டியணைத்து அழுதுள்ளார் அவரது தாய் ஷபானா பேகம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகமது சிராஜின் தந்தையான முகமது கவுஸ் காலமானார். சிராஜ், ஆஸ்திரேலியாவில் இருந்ததால் அவரால் உடனடியாக நாடு திரும்பமுடியவில்லை, இருப்பினும் தன் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்றார்.
3 டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார், குறிப்பாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு தாய்நாடு திரும்பிய சிராஜ், தன் தந்தையின் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்து வீட்டுக்கு சென்றதும், தாய் ஷபானா பேகத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சிராஜ் பேசுகையில், என் தந்தையின் இழப்பை என்னால் முதலில் தாங்க முடியவில்லை.
மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன், குடும்பத்தினருடன் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது, அவர்கள் தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என கூறினர், நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டையும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன்.
ஒவ்வொரு முறை நான் சிறப்பாக ஆடும்போதும் நான் அவருடன் தொடர்பு கொள்ள ஆசைப்படுவேன். நிறைய முறை அவரை அழைக்க வேண்டும் என்று நினைப்பேன், பிறகுதான் புரியும் அவர் உயிரோடு இல்லை என்பது, அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.