திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் - 4 கோடி உண்டியல் காணிக்கை..!
கொரோனா காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
மேலும் பக்தர்கள் காணிக்கையும் வெகுவாக குறைந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துவிட்டது.
பக்தர்கள் வழக்கம்போல் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
நேற்றும் இன்றும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் ,சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குவிந்த காணிக்கை
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் ,உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப்பெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.