இனவெறி பேச்சுகளுக்கு எதிராக கொந்தளித்த தமிழக வீரர் அஸ்வின்
இனரீதியான பேச்சுகளை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின். சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
போட்டியின் 4-வது நாளில் இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்துள்ளனர்.
நேற்றும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததாக ஏற்கனவே புகார் கூறப்பட்டிருந்தது, இதனையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அஸ்வின் கூறுகையில், நானும் இதுபோன்ற இனரீதியான பேச்சை எதிர்கொண்டேன், ஆஸ்திரேலிய ரசிகர்கள் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல, இதை இரும்புகரம் கொண்டு ஓடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.