ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை - EDக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவதற்காக
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பின் இருவரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் இருவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதில் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை.
இதனால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர். கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.