விஜயலட்சுமி வழக்கு - சீமானுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்
விஜயலட்சுமி அளித்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி அறிவித்தார்.
சீமான் மனு தள்ளுபடி
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சீமான் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார்.
இந்த நிலையில், சீமான் அளித்த மனு மீதான வழக்கு இன்று (17.02.25) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் தொடர்பு வைத்துள்ளார் என்றும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், "விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்ப பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.