தன்னையே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர், அழுதுகொண்டே சென்ற நபர் - இதுதான் காரணம்!
கவுன்சிலர் ஒருவர் தனது செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலர்
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் நகராட்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு கவுன்சிலராக உள்ளார். இவர் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. தற்பொழுது 31 மாதங்கள் சென்றுவிட்டன, ஆனால் அவரால் தனது தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.
பரபரப்பு
இந்நிலையில், மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்று கவுன்சிலர் வருத்தமடைந்தார். தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் நகரசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர் ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று ஆதங்கத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்,
திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்து கொண்டார். அதன்பிறகு அவர் வேதனையுடன் அழுதபடியே அங்கிருந்து வெளியே சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.