முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கும் கொரோனா பாதிப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக இர்பான் பதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனாலும் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெண்டுல்கர், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணிக்காக ஆடிய இர்பான் பதானும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.