மீண்டும் கொரோனா வந்தால் இதுதான் நிலை - அமைச்சர் மா.சு.
கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.
இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் நிலவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.
அமைச்சர் பேட்டி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 5755 ஆக உள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கர்ப்பிணி உள்பட 4 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 194 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் வந்தால், அதனை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.