இனி ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை - அரசு முடிவு
வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
10 மணி நேர வேலை
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஆந்திராவில் ஆளும் இந்த கட்சி தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியிருப்பதாவது, “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது.
அரசு முடிவு
உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55 இன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்தது.
இப்போது அது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.