ஆட்சியில் பங்கு கேட்கிறதா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சி தங்களிடம் ஆட்சியில் பங்கு குறித்து எதுவும் பேசவில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக ”தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பயணத்தை இன்று தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நட்சத்திர பேச்சாளர்கள், 234 தொகுதிகளிலும் திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசவுள்ளனர்.
மேலும் அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்த போது, மாநில அரசுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழகத்தை மிக சிறப்பாக முதலமைச்சர் வழிநடத்தி வருகிறார்.
தேசத்தை மதவாத நாடாக மாற்றவும் முயற்சிக்கிறது. அண்ணாவின் பெயரை வைத்து கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக செயல்படக்கூடிய மத்திய அரசிடம் அதிமுக அடிமையாக இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் எப்போதும் எங்களிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, திமுக-வுக்கு காங்கிரஸ் எப்போதும் உறுதுணையாக இருக்கும், ஆட்சியில் பங்கு குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
