தமிழ்நாடு தலைகுனியாது! இன்று பரப்புரையை தொடங்கும் திமுக
”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறது திமுக.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆயத்தமாகி கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக.
இதற்காக இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு, வெல்லும் தமிழ்பெண்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாடு போன்ற மாநாடுகள், அடுத்தடுத்த பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

இன்று முதல் ”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை தொடங்கவுள்ளது, இதற்காக 22 நட்சத்திர பேச்சாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
234 தொகுதிகளிலும் இவர்கள் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர், அனைத்து தொகுதிகளிலும் திமுக மேற்கொண்ட சாதனைகள், மக்களுக்கான திமுகவின் திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறவும், தொகுதிகளில் உள்ள தீ்ர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து மக்கள் வாயிலாக கேட்டறியவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க திமுக மகளிர் அணியும் களமிறங்கியுள்ளது, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்கவுள்ளனர்..
இவர்களுக்கான அறிவுரைகளை திமுக மகளிரணி தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி வழங்கியுள்ளார்.
