காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; இபிஎஸ் ஏக்கர் கணக்கில் பொய் - முதல்வர் காட்டம்!
ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் காட்டம்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரத்தில் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தல் 2-வது விடுதலைப் போராட்டம். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை. 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியுள்ள திட்டத்திற்கு தடை போடும் தேர்தல் அறிக்கை" என பெருமிதம் தெரிவித்தார்.
வெட்கமே இல்லை
மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாங்கள் வலியுறுத்தியதால் தான் செயல்படுத்தப்பட்டது என எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் சொல்கிறார். ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரூ.1,000 உரிமைத் தொகையை ஸ்டாலின் அண்ணன் கொடுத்தார் என பெண்கள் கூறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சீரழித்த பாவத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மட்டுமல்ல அதிமுகவையும் அடகு வைத்துவிட்டார். அவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் நம்ப தயாராக இல்லை.
அதிமுக ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தை சீர்திருத்த பல அவசர நடவடிக்கைகளை எடுத்தோம். இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலக நாடுகளே தமிழ்நாட்டை கவனிக்கும் வகையில் சாதனைகளை செய்து வருகிறோம். திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் கனடா வரை சென்றுள்ளது என்று பரப்புரையாற்றினார்.