முதலமைச்சர் பிறந்தநாள் - இன்று சந்திக்க வருபவர்களுக்கு இதுதான் கிஃப்ட்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மரக்கன்று
இதில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் முன்னெடுத்துள்ளார்.