குடும்ப கட்டுப்பாடு வேண்டாம்; அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - ஸ்டாலின் அட்வைஸ்
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருமண விழா
தஞ்சாவூரில் திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் இல்ல திருமண விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ”தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். அதேபோல, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது நல்லது. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை.
ஸ்டாலின் அட்வைஸ்
இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர். குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கான நிலை உருவாகி இருக்கிறது. ஏனென்றால் மக்கள் தொகை அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்து கொடுக்கிறார்கள்.
குடும்ப கட்டுப்பாடை சரியாக பின்பற்றியதால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நாடாளுமன்ற எண்ணிக்கை குறையும் சூழ்நிலை வந்திருக்கிறது. அதனால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.