மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கிறது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின் போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. தி.மு.க. அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் அரசு.
நிதி வழங்கவில்லை
பாதிப்பின் போது பார்வை இடுபவர்கள் நாங்கள் அல்ல; எப்போதும் உங்களுடன் இருப்போம். பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தேவையான திட்டங்களை தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு.
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.6,000 வரை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு ரூ.666 கோடி செலவு செய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் சீரழிந்த சாலைகள் ரூ.342 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை" என்று பேசியுள்ளார்.