ரிப்பீட் மோடில் ’முத்த மழை’ பாடல் - சின்மயி தடைக்கு முடிவு எப்போது?
சின்மயிக்கு விடுக்கப்பட்டுள்ள தடை குறித்து தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
சின்மயிக்கு தடை
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் கட்டிப்போட்டது. தொடர்ந்து சின்மயி தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை காலம் பாடவில்லை, அவரை பாட கூடாது என தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
டப்பிங் கலைஞர்கள் (SICTADU) சங்கத்தின் 2 ஆண்டு சந்தாவை சின்மயி செலுத்தாததே, தடை செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்பட்டது, எனினும் முன்கூட்டியே எந்த அறிவிப்பும் இல்லாமல் சின்மயி திடீரென சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எழுப்பியதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சின்மயி, என்னுடைய வழக்கு நீதி விசாரணையில் இருப்பதால், என்னால் இப்போது எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது.
எப்போது முடியும்?
ஆனால் எனக்கு முன்பாகவே, ராதா ரவியைச் சார்ந்தவர்கள் நிறையப் பேருக்குத் தடை விதித்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் தொழில் வாய்ப்புகளை முற்றிலுமாகப் பறித்து, அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஒரு சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், எப்படியோ மற்ற சில சங்கங்களிலும் நிர்வாகிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வடிவத்தில் ஒன்றிணைந்து உள்ளனர். நான் ஏன் 7 ஆண்டுகளாக அதிகம் பணியாற்றவில்லை என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
ஆடியோ விழாவில் திரைப்படத்தில் அசலாகப் பாடிய பாடகர் இல்லாதபோது, இன்னொரு பாடகர் அதைப் படுவது வழக்கம்தான். அந்த வகையில் தெலுங்கு மற்றிம் இந்தியில் நான் பாடிய, முத்த மழை பாடலை, தமிழில் பாடி இருந்தேன். இன்னும் இசையிலும் கலையிலும் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்.
எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளிக்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான தடை சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.