கோவில் கருவறையில் மகளிர் குரல் - பெண் அர்ச்சர்கள் குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் என முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பெண் அர்ச்சகர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. தொடர்ந்து, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய நகரங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி, 2022-2023 காலகட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் படித்த 94 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களில் மூன்று பேர் பெண்கள்.
முதலமைச்சர் பெருமிதம்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.