கனமழையால் வானில் திண்டாடிய ஹெலிகாப்டர் - தரையிறங்கிய போது முதலமைச்சர் மம்தா காயம்..!
ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயமடைந்துள்ளார்.
முதலமைச்சர் காயம்
மேற்கு வங்க மாநிலத்தில் ஜுலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக மம்தா பானர்ஜி சென்றார்.
பின்னர் ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்
இதையடுத்து அவர் அருகில் உள்ள அரசு மதருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக மருத்துவமனையில் இருந்து சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா காரில் ஏறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.