களத்தில் இறங்கிய முதல்வர் எடப்பாடிக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு
அதிமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, பிரச்சார களத்தில் இறங்கிய முதலமைச்சருக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், இலங்கை தமிழர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அதிமுக தேர்தல் அறிக்கை மூலமாக முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
சென்றமுறை கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது மக்கள் வெள்ளம் அலை கடலென திரண்டனர். ஆனால் இம்முறை திமுகவின் கோட்டை எனப்படும் காவிரி டெல்ட்டா பகுதிகளிலும், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை மக்கள் தந்து வருகின்றனர். விவசாயிகள் அதிக அளவில் இருக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரின் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
காரணம், முதல்வர் ஒரு விவசாயி என்பதாலும், விவசயிகளுக்கு முதல்வர் அளித்த பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி தான். மேலும், ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் விவசாயிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து பேசி வரும் முதலமைச்சர், தான் ஒரு விவசாயி என்பதால் விவசயிகள் சந்திக்கும் கஷ்டங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தொடர்ந்து அறிவிப்புகளை மேற்கொண்டு வருவதால் முதலமைச்சரை தங்களில் ஒருவராக கருதுகின்றனர்.
அதனால் காவேரி டெல்டா பகுதியும், கொங்கு மண்டலம் போல அதிமுக கோட்டையாக மாற இம்முறை வாய்ப்புள்ளது.
அதனால் அதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் முதலமைச்சரின் தொடர் பிரச்சாரம் என அதிமுகவிற்கு இரட்டிப்பு பலத்தை கொடுத்துள்ளது.