சென்னையில் தொடங்கியது ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்...!
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் (நாளை) 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
ஒலிம்பியாட் ஜோதி
கடந்த ஜூன் 19-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து, ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஒலிம்பியாட் ஜோதி, நாற்பது நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இன்று இறுதியாக மாமல்லபுரம் வந்தடைகிறது.
ஜோதி ஓட்டம்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை நேரு விளையாட்டு அரங்கம் வரையிலான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியுள்ளது. மாநிலக் கல்லூரி மைதானம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. ஒலிம்பியாட் ஜோதியை உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார்.
பிரதமர் மோடி வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வருகை தர இருக்கிறார். சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 4.45 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.