செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் விசிட்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு
இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் திடீரென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வுகளை மேற்கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது.
பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் புதிதாக 10 புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று செஸ் வீரர்களுக்கு ஓய்வு நாள். அதனால், அவர்கள் கடற்கரைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால், இதற்காக கடற்கரை ஓரம் 100 உயிர் காக்கும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.