செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் - ரூ.1 கோடி அறிவித்த முதலமைச்சர்!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இரண்டு அணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ. 1 கோடியை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ரூ.1 கோடி பரிசு
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடு விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் 'இந்திய பி அணியும்'
பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.