சென்னையில் ஸ்மார்ட் பைக் திட்டம் தொடக்கம்: முதல்வர் தொடங்கினார்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் இபைக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மயிலாப்பூர் நாகேஷ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, நந்தனம், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம் , பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் பைக் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில், ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த ஆப் மூலம் பைக்குகளை இயக்கி கொள்வதுடன் கட்டணத்தையும் பயனர் செலுத்தி கொள்ளலாம். இந்த பைக்கானாது பேட்டரியால் இயக்கக்கூடியது. இதை இயக்க முதல் 10 நிமிடங்களுக்கு ரூ.10, அதற்கு அடுத்த ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தனியாக ஜிஎஸ்டி கட்டணமும் உள்ளது.
இதேபோல் அடுத்த தலைமுறை சைக்கிள்களை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.50 மற்றும் அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ரூ.9.90 என கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி கட்டணம் தனியாக வசூலிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அளிக்கும் வரவேற்புக்கு அடிப்படையில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.