உடலுறவுக்கு முன்... பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டுமா? நீதிமன்றம் கருத்து!
ஒருமித்த உடலுறவில் ஒருவர் தனது துணையின் பிறந்ததேதியை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் புகார்
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இளைஞருடன் உடலுறவில் இருந்ததாகவும், முதல்முறையாக உடலுறவு கொண்டபோது,
தான் ஒரு மைனர் என்பதால், அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரியிருந்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், அண்மையில் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றம் கருத்து
இந்நிலையில் ஜாமீன் கோரி இளைஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இளம்பெண்ணின் விருப்பத்துடனேயே உடலுறவு வைத்ததாகவும், அதோடு பெண்ணின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் அவருக்கு மூன்று வெவ்வேறு பிறந்த தேதி இருப்பதாகவும் தெரிவித்த இளைஞர்,
அவர் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒருமித்த உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது துணையின் பிறந்ததேதியை ஆதார் அட்டையிலோ, பான் அட்டையிலோ ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தது.
மேலும் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியை வைத்துப் பார்த்தால், உடலுறவு கொண்டபோது இளம்பெண் மைனர் இல்லை என்று தெரிகிறது, அதனால் இளைஞரிடம் பணம் பறிக்கும் நோக்கிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக அனுமானிக்க முடிகிறது என்று கூறி, இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.