சந்திராயன் 3க்காக உழைத்த பொறியாளர்; இட்லி விற்கும் அவலம் - கலங்கடிக்கும் பின்னணி!
சந்திரயான் 3 திட்டத்திற்கு உதவிய டெக்னிஷியன் தற்போது இட்லி விற்பனை செய்கிறார்.
சந்திரயான் 3
சந்திரயான் 3 திட்டத்தில் ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் HEC (Heavy Engineering Corporation Limited) என்ற நிறுவனம் லான்ச் பேட் எனப்படும் ஏவுதளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நடைபாதைகள், ஸ்லைடிங் கதவு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதில் பணியாற்றியவர்தான் தீபக் குமார் உப்ராரியா. டெக்னிஷியனாக வேலைபார்க்கும் இவருக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வாட்டிய வறுமை
இவரைப் போன்று 2800 ஊழியர்களுக்கும் ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஊதியம் வழங்கவில்லையாம். இதனால் வறுமை காரணமாக தற்போது மத்திய பிரதேசம், ஹர்தாவைச் சேர்ந்த இவர் இட்லி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், எனது வீட்டிற்காக நான் ரூ. 4 லட்சம் வரையிலும் கடனாளி ஆகியுள்ளேன். இதை நான் வாங்கியவர்களிடம் திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் எனக்கு பணத்தை கடனாக தரவில்லை. இதையடுத்து எனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து செலவுகளை கவனித்தேன்.
இதன்பின்னர் நான் இட்லி விற்க தொடங்கினேன். ரூ. 300 – 400 வரையில் விற்பனையாகிறது. இதிலிருந்து ரூ. 50-100 வரை லாபம் கிடைக்கிறது. இதை வைத்து நான் குடும்பத்தை கவனிக்கிறேன். எனக்கு 2 மகள்கள். இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை. இதற்காக பள்ளி நிர்வாகம் எனக்கு தினந்தோறும் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.