நிலவை நெருங்கிய சந்திராயன் 3; இன்றுதான் முக்கிய கட்டமே.. விஞ்ஞானிகள் ஆயத்தம்!
சந்திரயான் 3 விண்கலம், தற்போது நிலவை நெருங்க தொடங்கியுள்ளது.
சந்திரயான் 3
இஸ்ரோ ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வு
அந்த வகையில், பூமியின் சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் தற்போது பயணித்து வருகிறது. இதனிடையே, இன்று சந்திரயான் -3 திட்டத்தின் மிக முக்கிய பணி நடைபெறுகிறது.
அதாவது, விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை தனியாக பிரிக்கும் நடவடிக்கையை விஞ்ஞானிகள் இன்று தொடங்க இருக்கின்றனர். இந்த பணி முடிவில் லேண்டர் தனியாக பிரிந்து விடும். அதன்பிறகு இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும்.
அதன்பிறகுதான், சந்திரயான் 3 விண்கலத்தின், லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும்.
திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.