நிலவின் புத்தம் புதிய படங்களை அனுப்பியுள்ளது சந்திரயான் 3 - பூமியையும் படம்பிடித்துள்ளது!
நிலவின் புதிய படங்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியுள்ளது சந்திரயான் 3.
சந்திராயன் 3
கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் ௩ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1,437 கி.மீ. தூரம் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இதே நுட்பத்தில் நிலவுக்கும் விண்கலத்துக்குமான தூரம் மேலும் இரு முறை குறைக்கப்பட்டு, அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும்.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பியிருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டு வந்தது.
புதிய படங்கள்
இந்நிலையில் நிலவின் புதிய படங்களை சந்திரயான் 3 விண்கலம் இன்று அனுப்பியுள்ளது. பூமியையும் படம் பிடித்துள்ளது. லேண்டர் கருவியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள கடல் போன்ற பகுதியை விண்கலம் அனுப்பியுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளன. அந்த பகுதி வடக்கு, தென்கிழக்கு பகுதியில் 2500 கி.மீ பரவியுள்ளது. வரும் 23ம் தேதி நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.