கடல் நடுவில்..பேனா நினைவுச்சின்னம் - தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
கடலுக்கு நடுவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கருணாநிதி
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்குள்ளே பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
மத்திய அரசு கடிதம்
இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை தமிழக பொதுப் பணித்துறைக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நினைவுச்சின்னம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த அறிக்கையை விரிவாக 4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.