மத்திய அரசு கேட்டதை கொடுப்பதில்லை ; எப்போதும் குறைவு தான் - பழனிசாமி குற்றச்சாட்டு
எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதி தான் மத்திய அரசு அளிக்கும் என பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கடும் வெள்ளத்தில் பாதித்தது. அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததில் கடும் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
தற்போது மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்துள்ளது. இந்த நிலையில், சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் 4 இடங்களில் நீர், மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
பழனிசாமி குற்றச்சாட்டு
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், "தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் நிதியை குறைத்து தான் வழங்கினார்கள்.
தி.மு.க. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன.
தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.