மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – தனித் தீர்மானம் நிறைவேறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
சட்டசபை பேரவைக் கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டமன்ற கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.நேற்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வென்று என்று இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம்" என பேசினார்.
![சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!](https://cdn.ibcstack.com/article/6efbc031-2f7b-4bd8-8638-88b20cf00fdd/23-651be88c71af3-sm.webp)
சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
தனித்தீர்மானம்
இதன்படி இன்று சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதன் பின் இந்த தீர்மானம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்,“சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும்.
அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மேலும் இந்த சட்டத்தின்படி சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது.
மத்திய அரசு
சட்டப்படி, நிலைக்க கூடிய கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும். 2021ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கோவிட் தொற்றை காரணமாக சொன்னார்கள். கோவிட் தொற்று முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கிறது.
இது குறித்து கடந்த ஆண்டே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும். மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது." என பேசினார்.
தீர்மானம் முன்மொழிவு
இதன் பின் சட்டமன்றத்தில் கீழ்கண்ட தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமஉரிமை, வாய்ப்பை கிடைக்க உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இந்த பேரவை கருதுகிறது.
எனவே, 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இதில், முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது.