சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
இந்தியாவில் பிரிவினையை உண்டாக்கும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணசாமி கருத்து
சென்னையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அவர், "ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்து 77வது ஆண்டில் இருந்து வருகிறோம்.
இன்னும் இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது. மக்களைத் தொடர்ந்து சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது கிடையாது" என்றார்.
பிரிவினை உண்டாக்கும்
இதனை தொடர்ந்து, "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சியில் இருந்து மத்திய அரசு வரைக்கும் உண்டு. ஆட்சியாளர்கள், ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு அவர்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்டு சாதிவாரி கணக்கை வெளியிடுவதன் மூலம் யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவை துண்டாக்கக்கூடியது. மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பிளவு எண்ணங்களை உருவாக்கக்கூடியது. இது ஒரு தவறான நடைமுறை" என்று கூறினார்.