முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச். ராஜா
கடந்த 20ம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார்.
அப்போது எச். ராஜா தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
மேலும், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் எச். ராஜா பேசியதாக புகார்கள் எழுந்தன. அவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
வழக்குப்பதிவு
இதுகுறித்து காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி காவல் நிலையத்தில் எச். ராஜா மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசியது, இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாகப் பேசியது என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.