“எதிர்ப்பு குரலை நசுக்குகின்ற இந்த அரசுக்கு கன்னத்தில் வலுவான அறை விழுந்துள்ளது” - எச். ராஜா விமர்சனம்
கரூரில், பிஜேபி முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்துள்ளார்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிஜேபி கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிஜேபியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“மாரிதாஸ் கைது செய்ததை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இனிமேலாவது ஒழுங்காக தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள், சமூகவிரோத கட்சிகள் சேர்ந்து ஒரு கட்சியை ஆட்சியில் வைத்துள்ளது. இந்து கோயில்களை இடிக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது, ஸ்ரீபெரும்புதூரில் பட்டா நிலத்தில் உள்ள கோயிலை இடித்துள்ளனர்.
கோயில் நிலத்தில் உள்ள கிறிஸ்துவர் வணிக வளாகத்தை இடிக்கவில்லை. 100 சதவிகிதம் இந்துக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது, இந்துக்களுக்கு எதிராக மாநில காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
7 மாதமாக காவல் துறை அட்டூழியம் தாங்க முடியவில்லை. கரூரில் விநாயகர் சதூர்த்தியின்போது விநாயகர் விக்கிரகங்களை போலீசார் உடைத்துள்ளனர். இது என்ன தால்பன்கள் ஆட்சியா?
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சர்ச்சுக்கு வரக்கூடாது என இந்து விரோத அரசு உத்தரவிடுமா?
மாரிதாஸ் சொன்னதை ஆட்சேபிக்கிறேன். தமிழகம் காஷ்மீராக மாறிவிட்டது.இந்து விரோத ஆட்சியை தூக்கி எறிய மக்களிடம் பிரச்சாரம் செய்ய உரிமை உள்ளது, சர்வாதிகார தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.
முப்படைத் தளபதி உயிரிழப்பை கொண்டாடியுள்ளனர், இதை கொண்டாடுகிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மொத்தத்தில்,நிர்வாகத் திறமையில்லாத அரசாங்கமாக தமிழக அரசு உள்ளது.
ஜாக்டோஜியோ நண்பர்கள் இப்போது உணர்கிறார்கள் இந்த ஆட்சியை ஏன் கொண்டு வந்தோம் என்று, செயல்படாத அரசாங்கம் விமர்சனங்களை காது கொடுத்து கேளுங்கள்.
ராணுவ தளபதி உயிரிழந்தை கொண்டாடியவர்கள் இந்த நாட்டில் இருக்க தகுதியற்றவர்கள், தமிழகத்தின் தேச விரோத சக்திகள்.
கரூரில் 2 மாணவிகள் தற்கொலை தொடர்பாக ஏன் யாரையும் கைது செய்யவில்லை? சென்னை பிஎஸ்பி பள்ளி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்கள், கனிமொழி ட்வீட் செய்தார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்தவர்களை பழிவாங்க இந்த அரசாங்கம் முயல்கிறது. தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்படுகிறது.
தமிழகத்தில் இந்துக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் இந்துக்களுக்கு ஏற்பட்டது போல தமிழகத்தில் இந்த அரசாங்கம் ஏற்படுத்துகிறது.
இதை நிறுத்த வேண்டும், இவர்களது டிஎன்ஏவே ஃபிராடு. கலைஞர் ஆட்சியில் ஊழலில், தேன் எடுத்தவர்கள் புறங்கையை மட்டும் சுவைத்தார்கள், ஸ்டாலின் ஆட்சியில் தற்போது தேனையை சுவைத்து கொண்டு உள்ளார்கள்” என கூறினார்.