விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு - என்ன நடந்தது..?
விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன்8 கம்யூன் பப்' என்ற நிறுவனம் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. இதில் பெங்களூருவின் எம்ஜி சாலையில் இயங்கி வரும் பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோலியின் பப் மட்டுமல்லாமல் எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பப்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
பெங்களூரில் நள்ளிரவு 1 மணி வரை பப்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நேரத்தை தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், விதிகளை மீறிய பப்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும், இதனால் தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.