நாளையுடன் முடிவடையும் பிரசாரம்: கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

dmk bjp ntk dmdk aiadmk
By Jon Apr 03, 2021 01:07 PM GMT
Report

மிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதன்பின்னர் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில், தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது. தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமோ பிரச்சாரங்களை வெளியிடக்கூடாது. இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களை கவர்கின்ற வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது.

4 ஆம் தேதி இரவு 7 மணிக்குள், ஒரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக இல்லாத வெளியாட்கள் அனைவரும் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தாலும், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது.

ஆனால், அதே சமயம் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. சட்டமன்றத் தொகுதிக்கு வெளியிலிருந்து உள்ளே வரும் வாகனங்களை பரிசோதனை செய்ய அந்தந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தள்ளி தேர்தல் நாள் பணிகளுக்காக தற்காலிக பூத் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதில் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ள 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அந்த இடத்தில் உணவு பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது.