ரகசியமாக நடந்து முடிந்த பும்ரா, சஞ்சனா திருமணம் - யாருக்கெல்லாம் அழைப்பு - வெளியானது தகவல்!
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, விளையாட்டுத் துறை வர்ணனையாளர் சஞ்சனா கணேசன் இருவருக்கும் கோவாவில் நேற்று திருணம் நடந்தது. இதில் வெளிநபர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் யாரும் அலைபேசி பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கேமார மூலம் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், கொரோனா காரணமாக வெளிநபர்கள், சிறப்பு விருந்தினர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
பல்வேறு புரளிகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. இந்நிலையில் தற்போது திருமணம் யாருக்கும் தெரியாமல் கப்சிப் என நடந்து முடிந்துள்ளது. சஞ்சனா, 2014ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சென்றவர். தற்போது தனியார் தொலைக்காட்சியில் விளையாட்டுப் பிரிவு வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா கடைசிப் போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரிலும் அவரின் பெயர் இடம்பெறவில்லை.
பும்ரா பிறந்த சில வருடங்களில் அவரின் தந்தை மரணமடைந்தார். பும்ரா மற்றும் அவரது சகோதரி இருவரும் தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தார்கள். பும்ராவின் தாயார் அரசுப் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார்.