ரத்தத்தின் ரத்தமே... தங்கை திருமணத்தில் தந்தையின் சிலையை பரிசளித்த அண்ணன்!
ஹைதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சிலையை தன் தங்கையின் திருமணத்தின் போது அண்ணன் பரிசளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தந்தை இறப்பு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு அவுலா ஃபானி குமார் என்ற மகன் மற்றும் வைஷ்ணவி என்ற மகள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிப்படைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
தந்தை இறந்த 3 ஆம் நாளில் அவருக்காக ஒரு சிலை செய்ய வேண்டும் என்று அவரின் மகன் அவுலா ஃபானி முடிவுசெய்தார். முதலில் அவரின் உருவம் கொண்ட சிலையை சிறியதாக செய்தார்.
தங்கை திருமணம்
பின்னர் பெரிய சிலையை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து மூல பொருட்களை இறக்குமதி செய்தார் அவுலா ஃபானி. இந்த உருவ சிலை பெங்களூரில் செய்யப்பட்டது. மேலும் இந்த சிலையை சிலிக்கானைக் கொண்டு சுமார் 8 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர்.
தந்தை இல்லாதது குறித்து கவலை கொண்ட வைஷ்ணவியின் திருமணத்தில் அவர் அண்ணன் அவுலா ஃபானி, தந்தையின் உருவ சிலையை பரிசாக அளித்தார். இதனைக் கண்டு அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பலர் ஆச்சரியம் அடைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
தந்தை சிலை
மேலும் அவரின் உருவ சிலையின் முன்பு "கன்னிகாதானம்" நடைபெற்றது. அதே சமயம் அவரின் உருவ சிலையுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த நிகழ்வானது தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.