இஸ்ரேலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் - 'இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்' என பதிவு!
போர் நடக்கும் இஸ்ரேலுக்கு சென்றடைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 'இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்' என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் உச்சம் தொட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் ரிஷி சுனக்
இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக நேற்று இஸ்ரேலுக்கு பயணம் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நான் இஸ்ரேலில் இருக்கிறேன்.
இந்த தேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நான் உங்கள் சோகத்துடன் பங்கு கொள்கிறேன். பயங்கரவாதத்தின் தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன். இன்றும், எப்போதும்" என பதிவிட்டுள்ளார்.
I am in Israel, a nation in grief.
— Rishi Sunak (@RishiSunak) October 19, 2023
I grieve with you and stand with you against the evil that is terrorism.
Today, and always.
סוֹלִידָרִיוּת pic.twitter.com/DTcvkkLqdT