உயிரை காப்பாற்றிய பூச்சி முருகன் - நன்றி தெரிவித்த நடிகர் போண்டாமணி!
நடிகர் போண்டாமணி, தனக்கு மருத்துவ உதவி செய்த பூச்சி எஸ்.முருகனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
போண்டாமணி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜ்-யின் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதய கோளாறு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் நடிகர் போண்டா மணி விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். பின்னர், மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் போண்டாமணி.
பூச்சி எஸ்.முருகனுக்கு நன்றி
இந்நிலையில், தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகனை சந்தித்து நன்றி தெரிவித்தார் நடிகர் போண்டாமணி. இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.