மதிமுக கணேசமூர்த்தி மரணம்; வாரிசு அரசியலின் படுகொலை - கொதித்த தமிழிசை
கணேசமூர்த்தி தற்கொலை குறித்து தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
கணேசமூர்த்தி தற்கொலை
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர் கணேச மூர்த்தி. மதிமுகவின் பொருளாளராகவும் பணியாற்றி வந்தார். 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், திடீரென அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழிசை காட்டம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழிசை செளந்தரராஜன், கணேசமூர்த்தி இறந்தது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் என்றுதான் பிரதமர் மோடி கூறி வருகிறார். நன்றாகப் பணியாற்றிய மதிமுக எம்பியை வாரிசு அரசியல் படுகொலை செய்திருக்கிறது.
குடும்ப ஆசை, வாரிசு ஆசைதான் இந்த மரணத்துக்கு காரணம். அனுபவம் வாய்ந்த எம்பியை மகனுக்கு சீட் கொடுத்ததன் மூலம் வைகோ படுகொலை செய்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். உலகத்தில் எங்கேயும் நடக்காதது.
ஒரு எம்பி தற்கொலை செய்வது என்பது தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம். முதலில் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியல் ஒழியட்டும். அதன் பின்னர் பாஜகவின் ஜனநாயகத்தை பற்றி அந்த கட்சிகள் விமர்சிக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.