பாஜகவுடன் கட்சி இணைப்பு; எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார்? ராதிகா சரத்குமார் பதில்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
பாஜகவுடன் சேர்ந்திருப்பது குறித்து எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார்? என்பது குறித்து ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.
ராதிகா சரத்குமார்
நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவுடன் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரின் மனைவி ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
ராதிகா சரத்குமார் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பகுத்தறிவுவாதியாகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர் ராதிகாவின் தந்தையான மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா. தற்போது ராதிகாவும், அவரது கணவரும் பாஜகவுடன் சேர்ந்திருப்பது குறித்து எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
பாராட்டியிருப்பார்
அதற்கு பதிலளித்த ராதிகா சரத்குமார் "எனது தந்தையிடம் நான் அரசியல் குறித்து பேசியது கிடையாது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடன் நான் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்.
அங்கு அவர் பேசும்போது, அங்குள்ள மக்களை ஊருக்கு திரும்ப வர வேண்டாம் என்று கூறுவார். உங்கள் வாழ்க்கை தரம் இங்கு நன்றாக இருக்கிறது, இங்கேயே இருங்கள் என்று அவர்களிடம் சொல்வார்.
மக்களின் வாழ்க்கை தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இன்று, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மத்திய அரசு இருக்கிறது என்றால், கண்டிப்பாக எனது தந்தை அதை பாராட்டியிருப்பார்" என்றார்.