ஓபிஎஸ் கூட்டணிக்கு வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் அழைப்பு!
ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
தென்காசி, நெற்கட்டும்செவலில் மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, இன்றுவரை எங்களோடு தான் இருந்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார்.
கூட்டணிக்கு அழைப்பு
அவர் கூட்டணியில் தொடர்கிறார், சந்தேகமே வேண்டாம். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.
அதிமுக ஓரணியாக வேண்டும் என சசிகலா கூறியதை நானும் வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சி மீது மக்கள் 100% வெறுப்போடு இருப்பது கண்கூடாக தெரிகிறது. முதல்வர் வெளிநாடு சென்றது குறித்து வெள்ளை அறிக்கை வராது,
வெற்று அறிக்கை தான் வரும். திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே எங்களின் நோக்கம். நாங்கள் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் எங்கள் தேசிய ஜனநாயக் கூட்டணி 234 தொகுதிகளை வெல்லும் என வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.