உழைப்பை உறிஞ்சிவிட்டு ஊதியம் தர மறுக்கும் மத்திய அரசு - அழைப்பு விடுத்த ஸ்டாலின்!
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29 ஆம் நாள் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி,
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும்.
அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும். வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.