தமிழ்நாட்டில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெரும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
3 வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசி உள்ளார்.
அமைச்சர் எல்.முருகன்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடெங்கும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று நரேந்திர மோடி 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.
மேட்டுப்பாளையத்தில் இளைஞர் ஒருவர், இந்த பகுதியை ஏன் சுத்தமா செய்யவில்லை என கேட்டதற்கு, அந்த பகுதி காங்கிரஸ் கவுன்சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுளார்.
எதிர்பார்க்காத வெற்றி
யூடியூப்பில் ஏதாவது தகவல் பதிவிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்கின்றனர். ஆனால், அந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக அந்த இளைஞர் மீதும், அவர் தாய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை பாதுகாப்பது காவல் துறைக்கு அழகல்ல.
மற்றொரு சம்பவத்தில், டிக்கெட் எடுக்காத காவலரும், நடத்துனரும் கட்டிப்பிடித்து கொள்வது கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
2014 ல் இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் 5 இடம் முன்னேறி இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தில உள்ளது. 2027 ல் 3வது இடத்திற்கு செல்வோம் என்பதே பிரதமர் மக்களுக்கு வழங்கும் கேரண்டி.
தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வெற்றி பெறுவோம், இரட்டை இலக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் சமர்பிப்போம் என்றார்.