ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா..? - அண்ணாமலையை தடுத்து நிறுத்திய கிறிஸ்தவ வாலிபர்கள்!
புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்ற அண்ணாமலையை அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர்.
அண்ணாமலை
தர்மபுரி மாவட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர். ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்தனர்.
மேலும், அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பி மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டனர். இதனால் அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கேள்வி
அப்போது பேசிய அண்ணாமலை "மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் 2009-ல் கலவரம் நடந்தது. அங்கு தமிழர்கள் இறந்தபோது யாரும் கேட்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் தி.மு.க.வினர் பேசுவதுபோல் பேசக்கூடாது. அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா?' என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றினர். பின்னர் ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.