காமெடி பண்ணும் பாஜக.. இளையராஜாவை வைத்து அரசியல் - திருமாவளவன் சாடல்!
இளையராஜாவை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக கனவு காணுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
இந்தியாவில் ஜி20 மாநாடு நடக்க உள்ளது. அதனால் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், “தமிழ்நாட்டில் பாஜகவினர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களை சிரித்துக் கொள்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவை கண்டு யாரு அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.
பாஜக அரசியல்
தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர்.
எனவே தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது 4 குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம். அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும்
இதை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.