ராஜினாமா செய்துவிட்டேன்; பாஜகவுடன் கைக்கோர்ப்பு - விலகியது ஏன்? பீகார் முதல்வர் பரபரப்பு பேட்டி!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிதீஷ்குமார்
ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமாக இருந்தவர் நிதிஷ்குமார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி இருந்தது.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி வலுத்தது.
ராஜினாமா
இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து, தனது கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
இதில், முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிதிஷ்குமார் கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்பின், ஆதரவு வழங்கும் கடிதத்தை பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து கட்சி மேலிடம் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து, பாஜக ஆதரவில் விரைவில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து பேசிய நிதிஷ்குமார், கட்சி தலைவர்கள் ஆலோசனையின் படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அரசியல் சூழல் காரணம் மகாகட்பந்தன் கூட்டணி முறிந்து விட்டது.
குழப்பத்தை சரி செய்ய முயற்சித்தும் முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.